Monday, July 13, 2015

ஈச்வரனும் வேதகர்த்தாவல்லன்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar


ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் ஈச்வரன் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாக சொல்லப்படுகிறதே, ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்க முடியாதே. ஆகையால் தான் முதலில் வேதம் இயற்றப்பட்டிகுக்க வேணுமென்று ஏற்படுகிறதே, ஆனபின்பு வேதம் அபௌருஷேய மென்பது எங்ஙனே? என்ன வேண்டா. உண்மை  என்னவெனில், வேதத்திற்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லோமோ அப்படியே ஈச்வரனும் கர்த்தாவல்லன்; உலகத்தில் ஸ்ருஷ்டியானது ஒன்றன்பின் ஒன்றாக அநாதிகாலமாய் நடந்து வருகின்றது. ஒவ்வொரு கல்பத்தின் ஆரம்பத்திலும் ஈச்வரன் நான்முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறான். ஆனால் முன் கல்பத்தில் வேதம் எவ்விதமான வரிசைக் கிராமத்தோடு இருந்ததோ அவ்விதமாகவே மறு கல்பத்தின் ஆரம்பத்திலும் வேதம் உபதேசிக்கப்படுகிறது. எவ்விதமான மாறுபாடும் செய்யப்படுவதில்லை. அநாதி காலமாக இங்ஙனமே நிகழ்ந்து வருகின்றது. வேதத்தின் விஷயத்தில் ஈச்வரனுடைய செயல் இவ்வளவே. புதிதாக வேதம் நிருமிக்கப்படுகிறதென்பது ஒருநாளிலுமில்லை. ஆகவே ஈச்வரனும் வேதகர்த்தாவல்லன்

ஸ்ம்ருதி, இதிஹாஸம், புராணம் என மற்றும் பல் வகை நூல்களுமுள்ளன. ஆனால் வேதம் எப்படி அநாதி காலமாய் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரையாய் ஒதப்பட்டு வருகிறதோ அப்படி மற்ற நூல்கள் ஓதப்பட்டு வருவதில்லை. அந்தணன், க்ஷத்ரியன், வைச்யன் என்ற மூன்று வர்ணத்தினரும் தவறாமல் வேதமோதியே தீரவேண்டுமென்றும், ஆசார்யமுகத்தினாலேயே வேதம் அதிகரிக்கப்படவேண்டுமென்ரறும் நியமங்களை ஏற்படுத்தி, இந்த விதிகளை மீறினால் ப்ராயச்சித்த்ங்களும் விதிக்கப்பட்டிருப்பதினாலேயே புத்திக்கு எட்டாத காலம் முதல் ஒரே விதமாக வேதமும் ஓதப்பட்டு வருவதோடு எவ்விதமான சந்தேஹத்திற்கும் இடமின்றியுமிருக்கிறது. ஆக, இப்படி வேதம் அபௌருஷேயமாய் நித்யமாய் நிர்தோஷமாய் இடையறாத பரம்பரையில் வருவதாயிருப்பதனாலே ஆரியர்களான நமக்குப் பரம ப்ரமாணமாயுள்ளது.  

கீழே நிரூபித்த அதிசயங்கள் தவிர மற்றோரதிசயமுமுண்டு வேதத்திற்கு. அதாவது இவ்வளவென்று எல்லை காண வொண்ணாதபடி அளவற்றிருக்கை. இவ்விஷயம் வேதத்திலேயே -- "अनन्ता वै वेदाः" (அனந்தா வை  வேதா:) -- என்று கூறப்பட்டுள்ளது. ஆக, வேதம் அபௌருஷேயமாய் நித்யமாய் நிர்தொஷமாய் அனந்தமாயிருந்து கொண்டு பரம ப்ரமணமானதென்று வேதத்தின் பெருமை விவரிக்கப்பட்டதாயிர்று.

Source:
அறுபத்து மூன்று உபன்யாசமாலை - (28), 1954, pp. 61-62.
From my Collections.

No comments:

Post a Comment