Monday, July 13, 2015

வேதத்தின் நித்யத்வம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

நம்முடைய சித்தாந்தத்தில், நித்ய வஸ்துக்கள் இரண்டு வகையாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கின்றன -- ஸ்வரூப நித்யமென்றும், ப்ரவாஹ நித்ய மென்றும். (ஸ்வரூப நித்யமாவது) எந்த வஸ்துக்கள் முக்காலங்களிலும் ஒரே தன்மையை உடையனவாய்க் கொண்டு ஒருகாலும் அழிவு இல்லாமல் இருக்கின்றனவோ அவை ஸ்வரூப நித்யமெனப்படும். மூல பிரக்ருதியும் ஜீவாத்மாக்களும் பரமாத்மாவும் மேலே சொன்ன லக்ஷணத்திற்கு லக்ஷ்யமாயிருக்கையாலே ஸ்வரூப நித்யமாம். இம் மூன்று பொருள்களின் ஸ்வரூபமும் எப்போதும் ஒரே தன்மையை யுடைத்தாய் என்றுமழியாமலிருக்கின்றது. எம்பெருமான் எந்த அவதார மெடுத்தாலும் அவனுடைய ஸ்வரூபத்தில் எவ்விதமான மாறுதலும் உண்டாவதில்லை. ஜீவாத்மாக்கள் தாம் செய்யும் கருமங்களுக்கு -- [நல்வினை தீவினைகளுக்கு] ஏற்பப் பல சரீரங்கள் எடுத்தாலும் ஸ்வரூபத்தில் எவ்வகைத்தான மாறுதலும் உண்டாவதில்லை. மாறுதலாவது விகாரம்; இது இரண்டு விதம்; ஸ்வரூபத்தைப் பற்றியதும் ஸ்வபாவத்தைப் பற்றியதுமாம். ஈசவரனுக்கு இவ்விரண்டு விதமான விகாரங்களும் கிடையாது. ஜீவாத்மாவுக்கு ஸ்வரூப விகாரமில்லை எனினும்  ஸ்வபாவ விகாரம் மாத்ரமுண்டு. பத்தன் (बद्धः) என்றும் முமுக்ஷு (मुमुक्षुः) என்றும் முக்தன் (मुक्तः) என்றும் இங்ஙனே ஸ்வபாவம் மாறுகின்றதன்றோ. மூல ப்ரக்ருதியின் ஸ்வரூபம் எப்போதும் விகாராஸ்பதமாகவே யிருந்தாலும் அது என்று மழியாத நித்ய வஸ்து வென்று ச்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் பட்டிருப்பதால் மூல ப்ரக்ருதியும் ஸ்வரூப நித்யமேயாம். ஆகவே இம்மூவகைப் பட்ட பொருள்களும் ஸ்வரூப நித்யங்களாம்.

இனி घटपटादिपदार्थ-கடபடாதிபதார்த்த-ங்கள் (பானை, துணி முதலிய பொருள்கள்) ப்ரவாஹ நித்ய மெனப்படும். இவை அழியும் பொருளாயிருக்க, எப்படி நித்யவஸ்துவாக சொல்லப் படலாமென்று கேள்வி பிறக்கும். இவை அழியாப் பொருளல்ல வென்பது உண்மையே. ஆனாலும் ஒரு பானை உடைந்து போய்விட்டாலும் அதுபோன்ற பல பானைகள் உலகத்தில் இடைவிடாது இருந்து கொண்டே இருக்கின்றன்; "பானை இல்லை" என்கிற சொல் எந்தக் காலத்திலும் கிடையாது.  இங்கு பானை என்றொரு பொருளை எடுத்துக் காட்டினது உபலக்ஷணம்.

அழியும் பொருள்களென்று நாம் காண்கிற எப்பொருளும் இப்படியே. ஆகவே, எச்சாதிப் பொருள்களுள் ஒன்று நசித்தாலும் மற்றொன்று இருந்து கொண்டே இருக்குமோ, உலகமுள்ள எக்காலத்திலும் அச்சாதிப் பொருள் இல்லை என்பது கிடையாதோ, அச்சாதி பொருள்கள் பிரவாஹ நித்ய மென்றதாகும். வேதமும் இந்த பிரவாஹ நித்ய கோஷ்டியில் சேர்ந்தது. அனந்த கோடி ப்ரஹ்மாண்டங்களுள் ஏதாவதொன்றில் எந்த மூலையிலாவது ஒருவன் வேதத்தை ஓதிக்கொண்டு தான் இருக்கிறான். வேத வொலி யில்லாத காலமே கிடையாது. எல்லாரும் ஒரே வகையில் தான் வேதத்தை ஓதி வருகிறார்கள். ஆகவே வேதம் பிரவாஹ நித்யம்.

இக்காலத்து ஆராய்ச்சியாளர்கள் வேதம் இன்ன காலத்தில் உண்டாயிற்றென்று தாங்கள் கண்டு பிடித்து விட்டதாகக் கூறிச் சில பாமரர்களை மயக்குகிறார்கள். ருக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வண வேதம் என்று சொல்லப்படுகிற நால்வகை வேதங்களுள் ஒவ்வொன்றிலும் அபரிமிதமான சாகைகள் உள்ளன. அவை சிறிதும் மாறுபடாத ஸ்வரத்துடன் உலகமெங்கும் கோடிக்கணக்கான அந்தணர்களால் ஒரே விதமாக ஓதப் பட்டு வருகின்ற ஓர் அதிசயத்தை ஆராய்ந்தால் இது அனாதியே என்பதை, பிடிவாதமுள்ளவர்களின் மனமும் இசைந்து தீரும். பத்து ச்லோகங்களையோ பத்து செய்யுள் களையோ புதிதாக இயற்றி இதை சென்னை மாநகரிலுள்ளவர்கள் கண்டபாடம் செய்து ஒரே விதமாய் ஒரே ஸ்வரமாய்ச் சொல்லி வரவேணும் என்று அரசாங்கத்தார் கட்டளை இட்டுப் பார்க்கட்டும். இது நடை பெறாதென்பது திண்ணம். கரை கட்டாக் காவேரிபோன்ற வேதராசிகளோ ஸகல நகரங்களிலும் ஸகல அக்ரஹாரங்களிலும் ஸகல கிராமங்களிலும் இமவந்தன் தொடங்கி இருங்கடலளவான எல்லாவிடங்களிலும் ஒருவருடைய கட்டளை யினாலன்றிக்கே அனாதிகாலமாக ஏகரீதியாய் ஓதப்பட்டு வருகிறபடியால் பகவானைப் போலவே வேதமும் நித்ய மென்பது நிராக்ஷேபமானது. இனி வேதத்திற்கு நிர்தோஷத்வமென்கிற சிறப்புப் பற்றி விவரிக்கிறோம்.


 Source:
அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (26), 1954, pp. 59-60.
-- From my collections.

No comments:

Post a Comment